Tuesday, November 17, 2009
நல்ல பங்குத் தரகரை தேர்ந்தெடுப்பது எப்படி?
"பங்குச்சந்தை" என்பது பலருக்கு புரியாத புதிர் மட்டும் அல்ல அறிவுக்கு விளங்காத போதையூட்டும் ஒரு வியாபாரமும் கூட. சரியான நேரத்தில் சரியான விலைக்கு பங்குகளை வாங்கி விற்றோமானால் இதனை போன்ற பணம் அறுவடை தரும் நிலம் எதுவும் இல்லை. ஆனால் தவறான முடிவுகள் அதே நிலத்தில் குழி தோண்டி புதைத்துவிடும் என்பதையும் மறந்துவிடலாகாது.
இந்திய பங்குச்சந்தையில் பங்கு பரிவர்த்தனை செய்ய விரும்புவோர்கள் முதலில் ஒரு நல்ல பங்குத்தரகரை தேர்வு செய்தல் வேண்டும்.
பங்குத்தரகர் என்பவர் யார்?
இந்தியாவில் வங்கிகளை மேலாண்மை செய்ய எப்படி RBI (Reserve Bank Of India) என்ற
அமைப்பு உள்ளதோ, அதைப்போல பங்குச்சந்தையை கண்காணிக்க SEBI (Securities and Exchange Board Of India) என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் அனுமதி பெற்று, அலுவலகம் அமைத்து பொது மக்களுக்கிடையே பங்குபரிவர்த்தனை நடைபெற உதவும் நபரே பங்குத்தரகர் எனப்படுவார்.
பங்குகளை வாங்கவோ இல்லை விற்கவோ வேண்டுமானால் இந்த பங்குத்தரகரிடம் நாம் ஒரு கணக்கு துவங்க வேண்டும். அதன் மூலமாகவே பரிவர்த்தனைகள் நடக்கும். பங்குகளை நாம் வாங்கினால் யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பது தெரியாது. விற்கும் பொழுதும் யாரிடம் விற்கிறோம் என்பது தெரியாது. ஆனால் இவர்களால், பணம் வரவு செலவு சரியாக நடந்துவிடும்.
ஒரு நல்ல பங்குத்தரகரின் வேலை, பங்குகளை வாங்க, விற்க உதவுவது மட்டும் அன்று. எந்த பங்கினை வாங்க வேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்று அறிவுறுத்துவதும் ஆகும். அப்படிப்பட்ட ஒரு நல்ல பங்குத்தரகரை தேர்வு செய்ய நாம் செய்ய வேண்டியவை பற்றி இங்கு பார்ப்போம்.
1. பங்குத்தரகரின் அனுபவத்தை (வணிக) கணக்கிடுங்கள். எத்தனை வருடங்களாக பங்குத்தொழிலில் இருக்கிறார்? வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பனவற்றை கணக்கிடுங்கள். நீங்கள் வேண்டும் பட்சத்தில் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த தரகர் தனது வாடிக்கையாளர்களைப் பற்றியும் அவர்களின் வெற்றியை பற்றியும் கூறுவார்.
2. பங்குதரகரின் கமிசனை தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வேறு ஏதேனும் மறைமுக Fees உண்டா என்பதனையும் தெளிவாக கேளுங்கள். நீங்கள்
சரியாக புரிந்துகொள்ளவில்லை எனில் இந்த கமிசனும் மற்ற மறைமுக வரிகளும்
உங்களது லாபத்தை விழுங்கிவிடும் அபாயம் உள்ளது.
பொதுவாக தினசரி வர்த்தகத்திற்கு (Intraday Trading) ஒரு கமிசன் முறையும், கொள்முதல் வர்த்தகத்திற்கு (Delivery Trading) ஒரு கமிசன் முறையும் வழக்கத்தில் உள்ளது.
3. அவர்கள் தரும் Prospectus மற்றும் Promotional Matrials -களை கவனமுடன் பார்க்கவும். அவர்களின் தினசரி மற்றும் கொள்முதல் வர்த்தகத்திற்கான நிபந்தனைகளை கவனமுடன் படிக்கவும். இந்த நிபந்தனைகள், ஒவ்வொரு பங்குத்தரகருக்கும் வேறுபடும். ஆகையால் கவனமுடன் படிக்கவும்.
4. அவர்களின் வாடிக்கையாளருகேற்ற ஆலோசனைகளை கணக்கிடவும். உங்களை பற்றியோ, உங்களின் அனுபவத்தை பற்றியோ தெரிந்து கொள்ளாமல் அவர்களது கமிசனுக்காக அதிகப்படியான தினசரி வியாபாரத்தில் ஈடுபட சொல்வாராயின், கவனமுடன் இருக்க வேண்டும்.
நினைவில் கொள்ளுங்கள். ஒரு நல்ல பங்குத்தரகர், Market பற்றிய நல்ல ஆலோசனைகளை வழங்குவதோடு, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அறிவுறுத்தவும் செய்வார். மேலும் கமிசன் சற்றே கூடுதலாகவும் இருக்கும். குறைந்த கமிசனுக்கு ஆசைப்பட்டு மோசமான பங்குத்தரகரை தேர்ந்தெடுக்காதீர்கள்.
வாழ்க வளமுடன்.
(இந்தப் பதிவினை ஆங்கிலத்தில் படிக்க equitybuzzers.blogspot.com )
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment